சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
197 - வாரணந் தனை (பழநி) Songs from this thalam பழநி 1338 - சிவணிதா வியமனது
197 பழநி திருப்புகழ் ( - வாரியார் # 106 )
வாரணந் தனை
முன் திருப்புகழ்
அடுத்த திருப்புகழ்
தான தந்தன தானான தாதன
தான தந்தன தானான தாதன
தான தந்தன தானான தாதன ...... தனதான
வார ணந்தனை நேரான மாமுலை
மீத ணிந்திடு பூணார மாரொளி
வால சந்திர னேராக மாமுக ...... மெழில்கூர
வார ணங்கிடு சேலான நீள்விழி
யோலை தங்கிய வார்காது வாவிட
வான இன்சுதை மேலான வாயித ...... ழமுதூறத்
தோர ணஞ்செறி தார்வாழை யேய்தொடை
மீதில் நின்றிடை நூல்போலு லாவியெ
தோகை யென்றிட வாகாக வூரன ...... நடைமானார்
தோத கந்தனை மாமாயை யேவடி
வாக நின்றதெ னாஆய வோர்வது
தோணி டும்படி நாயேனுள் நீயருள் ...... தருவாயே
கார ணந்தனை யோராநி சாசரர்
தாம டங்கலு மீறாக வானவர்
காவ லிந்திர னாடாள வேயயில் ...... விடும்வீரா
கார்வி டந்தனை யூணாக வானவர்
வாழ்த ரும்படி மேனாளி லேமிசை
காள கண்டம காதேவ னார்தரு ...... முருகோனே
ஆர ணன்றனை வாதாடி யோருரை
ஓது கின்றென வாராதெ னாவவ
னாண வங்கெட வேகாவ லாமதி ...... லிடும்வேலா
ஆத வன்கதி ரோவாது லாவிய
கோபு ரங்கிளர் மாமாது மேவிய
ஆவி னன்குடி யோனேசு ராதிபர் ...... பெருமாளே.
Easy Version:
வாரணம் தனை நேரான மா முலை மீது அணிந்திடு பூண்
ஆரம் ஆர் ஒளி வால சந்திர(ன்) நேர் ஆக மா முகம் எழில்
கூர
வார் அணங்கிடு சேல் ஆன நீள் விழி ஓலை தங்கிய வார்
காது வாவிட வான இன் சுதை மேலான வாய் இதழ் அமுது
ஊற
தோரணம் செறி தார் வாழை ஏய் தொடை மீதில் நின்று
இடை நூல் போல் உலாவியே
தோகை என்றிட வாகாக ஊர் அ(ன்)ன நடை மானார்
தோதகம் தனை மா மாயையே வடிவாக நின்றது எனா ஆய
ஓர்வது தோணிடும்படி நாயேன் உள் நீ அருள் தருவாயே
காரணம் தனை ஓரா நிசாசரர் தாம் அடங்கலும் ஈறாக
வானவர் காவல் இந்திர நாடு ஆளவே அயில் விடும் வீரா
கார் விடம் தனை ஊணாக வானவர் வாழ் தரும்படி மேல்
நாளிலே மிசை காள கண்ட மகா தேவனார் தரு
முருகோனே
ஆரணன் தனை வாதாடி ஓர் உரை ஓதுக என்று என
வாராது எனா அவன் ஆணவம் கெடவே காவலாம் அதில்
இடும் வேலா
ஆதவன் கதிர் ஓவா(து) உலாவிய கோபுரம் கிளர் மா மாது
மேவிய ஆவினன்குடியோனே சுர அதிபர் பெருமாளே. Add (additional) Audio/Video Link
ஆரம் ஆர் ஒளி வால சந்திர(ன்) நேர் ஆக மா முகம் எழில்
கூர ... யானைக்கு ஒப்பான பெரிய மார்பகங்களின் மேல் அணிந்துள்ள
ஆபரணமாகிய முத்து மாலையின் பேரொளியும், பூரண சந்திரனுக்கு
ஒப்பான சிறந்த முகம் அழகு மிகுந்து பொலியவும்,
வார் அணங்கிடு சேல் ஆன நீள் விழி ஓலை தங்கிய வார்
காது வாவிட வான இன் சுதை மேலான வாய் இதழ் அமுது
ஊற ... காண்போருக்கு மிக்க வருத்தம் தர வல்ல, சேல் மீன் போன்று
நீண்ட கண்கள் ஓலை பூண்டுள்ள அகன்ற காதுகளைத் தாக்கி நிற்கவும்,
தேவர்களது இனிய அமுதத்திலும் மேலான இனிமையுடன் வாயிதழ்கள்
அமுதத்தைப் பொழியவும்,
தோரணம் செறி தார் வாழை ஏய் தொடை மீதில் நின்று
இடை நூல் போல் உலாவியே ... அலங்காரத் தோரணங்களுக்குப்
பயன்படும் குலை தள்ளிய வாழையை நிகர்க்கும் தொடையின் மேல்
விளங்கும் இடை மெல்லிய நூலுக்கு ஒப்பாக உலாவி,
தோகை என்றிட வாகாக ஊர் அ(ன்)ன நடை மானார் ...
மயில் என்று சொல்லும்படி அழகாக ஊர்ந்து செல்லும் அன்னத்துக்கு
ஒப்பான நடையுடன் விளங்கும் விலைமாதர்களின்
தோதகம் தனை மா மாயையே வடிவாக நின்றது எனா ஆய
ஓர்வது தோணிடும்படி நாயேன் உள் நீ அருள் தருவாயே ...
வஞ்சகச் செயலை பெரிய மாயையே வடிவு கொண்டு நிற்கின்றது என
ஆய்ந்து அறியும் அறிவு எனக்குத் தோன்றும்படி அடியேனுடைய
உள்ளத்தில் நீ அருள் பாலிப்பாயாக.
காரணம் தனை ஓரா நிசாசரர் தாம் அடங்கலும் ஈறாக
வானவர் காவல் இந்திர நாடு ஆளவே அயில் விடும் வீரா ...
(முருகவேள் எதற்காகப் படையெடுத்து வந்துள்ளார் என்னும்)
காரணத்தை ஆய்ந்து அறியாத அசுரர்கள் எல்லாரும் முடிந்து
அழியவும், தேவர்களின் அரசனான இந்திரன் தன் பொன்னுலகத்தை
ஆளவும், வேலைச் செலுத்திய வீரனே,
கார் விடம் தனை ஊணாக வானவர் வாழ் தரும்படி மேல்
நாளிலே மிசை காள கண்ட மகா தேவனார் தரு
முருகோனே ... தேவர்கள் வாழும்படி, முன்பு ஒரு நாள் கரிய
(ஆலகால) விஷத்தை உணவாக உண்டவரும், கருநீலகண்டத்தை
உடையவருமான சிவ பெருமான் தந்து அருளிய முருகனே,
ஆரணன் தனை வாதாடி ஓர் உரை ஓதுக என்று என
வாராது எனா அவன் ஆணவம் கெடவே காவலாம் அதில்
இடும் வேலா ... வேதம் வல்ல பிரமனுடன் வாதம் செய்து, ஒரு
சொல்லுக்கு (பிரணவத்துக்கு) உரை ஓதுக என்று அவனைக் கேட்க,
வாராது என்று கூறி விழித்து நிற்க, அவனுடைய ஆணவம் அழிய,
பிரமனைச் சிறையில் வைத்த வேலனே,
ஆதவன் கதிர் ஓவா(து) உலாவிய கோபுரம் கிளர் மா மாது
மேவிய ஆவினன்குடியோனே சுர அதிபர் பெருமாளே. ...
சூரியனுடைய ஒளி நீங்காது எப்போதும் வீசுகின்ற கோபுரங்கள்
விளங்குவதும், லக்ஷ்மி தேவி விரும்பி வாசம் செய்வதுமான
திருவாவினன் குடியில் (பழநியில்) வீற்றிருப்பவனே, தேவர்
தலைவர்களின் பெருமாளே.
1
Similar songs:
தான தந்தன தானான தாதன
தான தந்தன தானான தாதன
தான தந்தன தானான தாதன ...... தனதான
This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
send corrections and suggestions to admin-at-sivaya.org
thiruppugazh song